யாழ். நல்லூரடியில் திருடியவர் நகைகளுடன் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் கடந்த 4 ஆம் திகதி 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள ஆசிரியரின் வீடொன்றில் ஜூலை 4 ஆம் திகதி நகைகள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் நாவற்குழியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 7 தங்கப் பவுண் தாலிக்கொடி, நெக்ளஸ், ஒரு தங்கப் பவுண் அளவுடைய 3 சங்கிலிகள், 3 சோடி தோடுகள், ஒரு மூக்குத்தி, 2 மோதிரங்கள், பெறுமதி வாய்ந்த அலைபேசி ஒன்று மற்றும் 2 பவுண் தங்க நகையை விற்பனை செய்த சிட்டை என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் நாளை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *