
உலகம் முழுவதும் பரவிவரும் டெல்டா வீரியம் கொண்ட வைரஸ், இலங்கையில் மிக இலகுவாக பரவும் அபாயம் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவித்தார்.
பல்வேறு வகையான கொவிட் திரிவுகள் உலகின் பல நாடுகளில் பரவி வருகின்ற நிலையில், டெல்டா திரிவு இலங்கையில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
டெல்டா வைரஸ் தாக்கத்திலிருந்து இலகுவாக இலங்கையினால் விடுப்பட முடியும் என தான் எண்ணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கையில் தற்போது செலுத்தப்படும் அனைத்து வகையான தடுப்பூசிகளிலிருந்தும் டெல்டா வைரஸ் தாக்கத்திலிருந்து தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், தென் அமெரிக்க நாடான பேருவில் பரவிவரும் லெம்டா வைரஸ், தற்போது பல நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் எப்ஸ்ஸயிலன் என்ற புதிய வகை கொரோனா திரிவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உலகம் முழுவதும் பரவும் வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.