பல ஜெஸின்டாக்கள் உருவாகினாலே அன்றி இந் நாட்டை காப்பாற்ற முடியாது-எம். எம். மஹ்தி

அதல பாதாளத்தை நோக்கி நகர்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் நம் நாட்டை பல ஜெஸின்டாக்கள் உருவாகினாலே அன்றி மீட்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

மேலும் குற்றச் செயல் ஒன்று நடக்கின்ற போது குற்றமிழைத்தவனை குற்றவாளியாக காணாது அவன் சார்ந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அச் சமூகத்தின் பொருளாதாரம், உயிர்களை அழிப்பதாக எண்ணி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை அழிக்கும் கேவலமான செயல்கள் அரங்கேற்றப் படுவதனால்த்தான் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரம் பாதிப்க்கப்பட்டு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருகின்றன.

அத்தோடு அரசியலுக்காகவும் சுயநலத்திற்காகவும் இவ்வாறான செயற்பாடுகளை ஊக்குவிக்கின்ற மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்களை உருவாக்குகின்ற போது இந்த நாடானது உருப்படப் போவதில்லை என்ற உண்மையை பெரும்பான்மை மக்கள் உணரவேண்டும்.

மேலும் நாம் தெரிவு செய்கின்ற தலைமைகள் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், விவசாயம் போன்ற துறைகளின் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளை முன்மொழிவதற்கு பதிலாக சுரண்டல், கொமிசன், ஊழல் மோசடிகளை செய்துகொண்டு இனவாதம், மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் இலாபத்தை தேடுகின்றனர். அதில் வெற்றியும் காண்கின்றனர்.

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதனை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஜெசின்டா அத்தாக்குதல் மதம் சார்ந்ததோ ஒரு இனம் சார்ந்ததோ அல்ல. அதற்கு வகை கூற வேண்டியவர் அந்தக் குற்றவாளியே என்று நிஜத்தை உலகறியச் செய்தார்.

இவ்வாறான ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்திருந்தால் இதுவரை பாரியதொரு கலவரமும் , அனர்த்தமும் ஏற்பட்டிருக்கும்.

எனவேதான் பல ஜெசின்டாக்கள் உருவாக்கப்பட்டாலே அன்றி இந்நாட்டை அதல பாதாளத்திலிருந்து மீட்க முடியாது என்ற உண்மையை இந் நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *