நைலோன் நூல் மோட்டார் சைக்கிளில் சிக்கி விபத்து – இளம் தாய், குழந்தை மரணம்!

காலி – கொழும்பு வீதியில் பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் மோட்டார் சைக்கிளில் சிக்கியமையினால் அதில் பயணித்த தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் 6 வயதுடைய சிறுவன் காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி – கொழும்பு பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் வீதி பக்கத்தில் காணப்பட்டதனால் அதனை கையில் எடுத்து அங்கிருந்து நீக்க முயற்சித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு அதனை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிள் வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது குடும்பத்திருடன் பெற்றோரை பார்ப்பதற்காக பயணித்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 34 வயதுடைய தாயும் ஒன்றரை வயதுடைய குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *