முதல் ஒருநாள் போட்டி: இந்தியா அணியிடம் வீழ்ந்தது இலங்கை அணி!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் தசுன் சானக 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், தீபக் சஹார், யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்ணல் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 263 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷிகர் தவான் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும் இசான் கிசான் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும் லக்ஷான் சந்தகென் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 24 பந்துகளில் 9 பவுண்ரிகள் அடங்களாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிரித்வீ ஷோ தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *