கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து 28 நாட்கள் முடிவடைந்த பின்னரோ அல்லது அவர் முழுமையாகக் குணமடைந்து 14 நாட்கள் பூர்த்தியடைந்ததன் பின்னரேயே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
மேலும் நாடளாவிய ரீதியில் 20 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி வழங்கல் பணிகள் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன.
மேலும் அவைகுறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே வைத்திநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அண்மைக்காலத்தில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் நாட்டுமக்கள் அதிக நாட்டம் காண்பித்து வருகின்றார்கள்.
மேலும் முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்குரிய காலப்பகுதியில் கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்திலும் மேற்குறிப்பிட்ட காலஅளவின் அடிப்படையிலேயே இரண்டாம்கட்டத் தடுப்பூசியைப் பெறவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், பரிசோதனை மூலம் தொற்று ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
அவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னர் மேற்கூறப்பட்டவாறான காலஅளவுகளின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெறமுடியும் என்று தெரிவித்தார்.