
நாட்டில் டெங்கு நோய் பரவல் தற்போது அதிகரித்துள்ளன என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் ஊடக பேச்சாளர் சமூக மருத்துவ நிபுணர் ஹிமாலி ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நுளம்புக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோய் காரணமாக 07 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் 15,272 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,600 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
எனவே மாவட்ட ரீதியில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அதற்கு அடுத்தப்படியாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்படி அங்கு 3,366 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தமது சுற்றுச்சூழல் தூய்மை தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இனிவரும் காலங்களில் டெங்கு நோயினால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையை பூச்சிய மட்டத்தில் பேணுவதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

