மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் ஆகியோர் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக்கோரி இன்று (19) மருத்துவமனை வளாகத்தில் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடமையாற்றும் தமக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு செம்ரெம்பர், நவம்பர் மற்றும் இவ்வருடம் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை மட்டுப்படுத்தி 60 மணித்தியாலங்கள் மாத்திரம் வழங்கினார்கள்.
60 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக பணியாளர்கள் மேற்கொண்ட நேரங்களுக்கான கொடுப்பனவை இதுவரை காலமும் தமக்கு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடையம் தொடர்பாக பல தடவைகள் எழுத்து மூலமாகவும் தொழிற்சங்க அடிப்படையிலும் பணியாளர்கள் ஒன்றிணைந்து மருத்துவமனையில் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த 2 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஒன்றை பணிப்பாளருக்கு அனுப்பி இருந்தோம். கடந்த 9 ஆம் திகதிக்கு முன் சரியான முடிவை வழங்குமாறும், அவ்வாறு சரியான முடிவு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தோம்.
பணியாளர்களாகிய எங்களை மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்தும் ஓர வஞ்சனையாக பார்த்துக் கொண்டுள்ள நிலையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.