கணவர் குடிபோதைக்கு அடிமை – 2 குழந்தைகளை கொன்ற தாய்!

ஆவடி அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை, திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி கவுரி (வயது 24) என்ற மனைவியும், தீக்சிதா (வயது 3) என்ற மகளும், அஸ்வின் என்ற 1½ வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி கவுரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் வீட்டு கட்டிட வேலைக்காக கவுரி வைத்திருந்த சீட்டுப்பணம் ரூ.50 ஆயிரத்தை கேட்டு ரமேஷ் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை ரமேஷ் தனது மனைவி கவுரியிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் பணத்தை வாங்கி கொண்டு மது அருந்த வெளியே சென்றுவிட்டார்.

Advertisement

தாயும் குழந்தைகளும் தற்கொலை

இதனால் மிகுந்த மன விரக்தியடைந்த கவுரி, குடிகார கணவருடன் வாழ்வதைவிட குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தார். இதையடுத்து மாடி வீட்டில் வசித்து வரும் அவர், வீட்டு கதவை பூட்டி உள்தாழ்ப்பாள் போட்டு விட்டு, மேற்கூரையில் இரும்பு குழாயில் தனது மகள் மற்றும் மகன் ஆகிய இருவரையும் தனித்தனியாக புடவையால் தூக்கில் தொங்கவிட்டார்.

குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர், மற்றொரு புடவையில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் கூழ் ஊற்றுவதற்காக கவுரியை அழைக்க அவரது வீட்டிற்கு மேல் மாடிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததை அறிந்து, சந்தேகமடைந்து அவரை அழைத்தும் வெளியே வராததால், ரமேஷின் தம்பி ராஜேசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ராஜேஷ் விரைந்து வந்து மாடி வீட்டுக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்த போது, வீட்டுக்குள் கவுரி தனது 2 குழந்தைகளுடன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று மூவரையும் மீட்டு, திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரையும் பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3பேரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. மதுவுக்கு அடிமையானதால் மனைவி மற்றும் பால் மணம் மாறாத 2 குழந்தைகளை வாலிபர் பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *