ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது எதிர்க்கட்சி!

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

கட்சி தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் கட்சி ஒருபோதும் உடன்படிக்கையை ஏற்படுத்தவோ அல்லது நிர்வாகத்தை அமைக்கவோ போவதில்லை என தெரிவித்தார்.

கோட்டா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள், என்றும் அந்த போக்கிற்கு தாங்கள் ஆதரவளிப்போம் என்றும் ராஜபக்ஷக்களின் கீழ் எந்த பதவியையும் ஏற்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசின் பதவிக்காலத்தின் இறுதி சில நாட்கள் இது என்று கூறிய அவர், மீண்டும் ஆட்சியைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த வகையிலும் உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் கோட்டாவை வீட்டுக்குப் போகுமாறும், ராஜபக்ஷக்களை வீட்டுக்குப் போகுமாறும் அழைக்கின்றனர் என்றும் பொதுமக்களின் அழைப்புக்கு தாங்கள் துணை நிற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களுடன் அல்லது ராஜபக்சக்களுடன் இருந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு விருப்பமோ தேவையோ இல்லை எனவும் ராஜித் சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துடனும் பொதுமக்களின் அங்கீகாரத்துடனும் மட்டுமே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அது ஜனாதிபதித் தேர்தலாகவோ, நாடாளுமன்றத் தேர்தலாகவோ அல்லது உள்ளூராட்சித் தேர்தலாகவோ இருக்கலாம் என்றும் பொதுமக்களின் ஆசியுடன் மட்டுமே ஆட்சி அமைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *