குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு: கொரோனாத் தொற்று அச்சத்தால்
தோண்டியெடுக்கப்பட்டது ஜனாஸா!
புதைக்கப்பட்ட ஜனாஸாவொன்று, கொரோனாத் தொற்று அச்சம் காரணமாக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் இறப்பு சாதாரண இறப்பென்று முதலில் கருதப்பட்டபோதிலும், அந்த இறப்பு கொரோனாவால் சம்பவித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு ஜனாஸா மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் வேப்பமடு பிரதேசத்தி லுள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்ட 56 வயதுடைய நபர் ஒருவரின் ஜனாஸாவே, புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் அசேல டி சில்வா முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை 4ஆம் திகதி தனது வீட்டில் காலமான குறித்த நபரது ஜனாஸா, அன்றைய தினமே வேப்பமடு பிரதேசத்தி லுள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எனினும், குறித்த நபர் உயிரிழந்து இரண்டு நாள்களின் பின்னர் அவரது மனைவி (வயது – 51) மற்றும் அவரது மகள் (வயது – 37) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஒரே நாளில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரினதும் ஜனாஸாக்கள், புத்தளம் தள மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்போது அவ்விருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரது ஜனாஸாக்களும் நல்லடக்கத்துக்காக புத்தளத்திலிருந்து ஓட்டமாவடிக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், 4ஆம் திகதி உயிரிழந்த முஹம்மட் நிஸ்தார் (வயது –56) என்பவருக்கும் கொரோனாத் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது ஜனாஸா நேற்றுமுன்தினம் தோண்டியெடுக்கப்பட்டது.