சீனாவிடமிருந்து 200 மில்லியனுக்கு பதிலாக 500 மில்லியனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படவுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை 500 மில்லியன் டொலராக அதிகரிக்க நடவடிக்கை இடம்பெற்று வருவதாக நிதி அமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை கையாளும் முகமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பான ஒப்பந்தம் குறித்து தற்போது நிதி அமைச்சிற்குள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

இலங்கை சார்பாக கடன் வழங்குநராக செயற்படும் நிதி அமைச்சிற்கும் சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் இந்த இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 700 மில்லியன் டொலர் கடனைப் பெற இலங்கை ஒப்புக் கொண்ட நிலையில் மார்ச் மாதத்தில் முதல் 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்ளப்பட்டது.

மீதமுள்ள 200 மில்லியன் டொலர் ஜூலை மாதத்தில் பெறப்படவுள்ள நிலையில் சீன தூதுவர் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடியைத் தீர்க்க சீன வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனைப் பெற இலங்கை மத்திய வங்கி ஒப்புக் கொண்டது.

இதேவேளை கடந்த மே மாதம் இலங்கைக்கு பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடனும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *