இலங்கையில் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட 300-க்கும் மேற்பட்ட பொலிஸார் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்ட சில வாரங்களுக்குப் பின்னர் இவ்வாறு நூற்றுக்கணக்கான பொலிஸாருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் திணைக்களம் சுகாதார நிபுணர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் தடுப்பூசி பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பப்பட்டுள்ளது. எனினும் தொற்றுக்குள்ளான பொலிஸார் தீவிர நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என தெரியவருகிறது.
Advertisement
தடுப்பூசிகளால் தொற்று நோயால் ஏற்படும் கடுமையான விளைவுகளையும் மரணங்களையும் குறைக்க முடியும். மாறாக தொற்றுக்குள்ளாவதைத் தடுக்க முடியாது என சுகாதார தரப்பினரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளகிப் பாதிக்கப்பட்ட பொலிஸார் தற்போது வெவ்வேறு கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் தடுப்பூசி திட்டம் முழு வீச்சில் நடந்து வருகிறது. 30 வயதிற்கு மேற்பட்ட 5 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு இதுவரை குறைந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வேகமாக பரவி வரும் ஆபத்தான டெல்டா திரிபால் ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க தடுப்பூசிகள் அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


