கடனை மீளக் கேட்ட பெண் கொன்று புதைக்கப்பட்டார்? யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

கடனை மீளக் கேட்ட பெண் கொன்று புதைக்கப்பட்டார்? யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில் கணவன் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளனர். மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலுமொரு சந்தேகநபரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3ம் மாதம் முதலாம் திகதி குறித்த பெண் காணாமல் போன நிலையில் மகன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில் குறித்த கொடூர சம்பவம் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
அரியாலை மணியந்தோட்டம் உதயநகரைச்   சேர்ந்த பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் மோட்டார் சைக்கிளும் புதைக்கப்பட்டுள்ளது.

கணவரைப் பிரிந்து வாழும் குறித்த பெண் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். சந்தேகநபரும் குறித்த பெண்ணிடம் மூன்று இலட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார் எனவும் குறித்த பணத்தை வாங்கச் சென்ற போதே வீட்டினுள் வைத்து  பெண்ணைக் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மறுநாள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை 1000ரூபா சம்பளம் கொடுத்து குப்பை போடுவதற்கு எனக் கூறி கிடங்கு வெட்டியுள்ளனர். குறித்த கிடங்கினுள் கொலை செய்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை புதைத்துள்ளனர்.  சம்பளத்திற்கு கிடங்கு வெட்டியவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் பணத்தினைக் கேட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து அடித்த போது குறித்த பெண் இறந்ததாகவும் அதன் பின்னர் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் திட்டமிட்டே வரவழைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *