மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடு! மன்னாரில் மாபெரும் போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை (8) காலை மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றது.

குறித்த கண்டன போராட்டம் காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.

சிவில் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் இணைந்து குறித்த கண்டன போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவுடன் பட்டினிச்சாவை நோக்கியுள்ளது.

இதனை கண்டித்து மன்னாரில் தன்னிச்சையாக ஒன்று கூடிய பொதுமக்கள் இளைஞர் யுவதிகள் பாடசாலை மாணவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கோட்டபாய ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பல கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், பொருட்களுக்கு தட்டுப்பாடு, எரிபொருட்கள் எரிவாயு தட்டுப்பாடு , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்தல், பொது மக்களுக்குச் சொந்தமான காணியை இராணுவம் அபகரிப்பு தொடர்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘கோட்டபாயவே வெளியேறு’,குடும்ப ஆட்சி வேண்டாம்’,’மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடு’ போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியதோடு, பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் உறவுகள், இளைஞர் யுவதிகள் ,சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *