ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என அடுக்கடுக்காய் சீர் கொடுத்து மருமகனை, மாமனார் ஆச்சரியப்படுத்திய சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதைபோல் தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் (ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்) ‘பொனாலு’ என்கிற ஆஷாதம் பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடுகிறார்கள்.
இந்த விழாவில் மணமான மகள்களுக்கு தந்தை சீர் செய்வது அவர்களின் வழக்கம். தங்கள் மகளை திருமணம் செய்து அனுப்பிய பிறகு பெற்றோர்கள் ஆடி மாத சீர்வரிசையை பரிசாக வழங்குவர்.
Advertisement
அதன்படி ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் மாவட்டத்தில் ஆஷாதம் விழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர்களை கொடுத்து அசத்தியுள்ளார்.
தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்து கொள்வதால் மகிழ்ச்சியடைந்த பலராம கிருஷ்ணன், 1000 கிலோ மீன்கள், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, 250 கிலோ மளிகைப்பொருட்கள், 250 வகையான ஊறுகாய், ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள் என வண்டி வண்டியாக சீர்வரிசையை மணமகன் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.