
பட்டதாரி பயிலுநர்களுக்கு 3 மாதங்களுக்குள் நியமனம்!
பயிலுநர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 53 ஆயிரம் பட்டதாரிகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் அரச நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயிலுநர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகள், தமக்கு வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருக்குமாயின் அதனை உரிய பகுதியினரின் கவனத்துக்குக் கொண்டுவருமாறும் அவர் கூறியுள்ளார்.
குறித்த பட்டதாரிகளுக்கு விரைவில் தொழில் வழங்குவதற்கான பொறுப்பை ஜனாதிபதி ராஜபக்ச சில அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார் என்று மேலும் தெரிவித்தார்.





