
இலங்கை இந்தியாவிடம் தொடர்ந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு வருகிறது. ஆனால், சீனாவுக்கு ஆதாரவாகத்தான் செயல்படுகிறது என்பதை இந்தியா உணராமல் இல்லை என சமதா கட்சியின் அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
உரம் இட்டு விளைச்சல் நடத்தும் நிலத்தை மூன்றாண்டுகள் வெறுமனே விட்டு, பின்னர் இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே அது விளைச்சலுக்கு உகந்ததாகும் என்ற புரிதல் இல்லாமல், இறக்குமதி செய்யப்பட்ட உரங்களை தடுத்து நிறுத்தி இயற்கை விவசாயத்தை அமல் படுத்தியது, தானிய விளைச்சலை இல்லாமல் செய்துவிட்டது.
இதை இலங்கை அரசு விவரம் இல்லாமல் செய்ததாக நாம் எண்ணவில்லை. இலங்கையில் தமிழர் பகுதிகளில்தான் விவசாயம், மீன் பிடித்தல், தேயிலை, பனைத் தொழில்கள் அனைத்தும் அடங்கியுள்ளது.
எனவே, தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காகவே இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் இது என்றும் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இதனாலேயே இன்று இலங்கை அரசு உணவு உற்பத்தியில் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.
13ஆவது சட்டத்தை அமல்படுத்துவதில் இந்தியா முனைப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் 13ஆவது சட்டத்தை அமல் படுத்துவதால், ஈழத் தமிழர்களுக்கு துளி கூட பயனில்லை, என்பதுதான் ஈழத்தமிழர்களின் எண்ணம்.
ஈழத் தமிழர்கள் விரும்பும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆட்சி அமைந்திட இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
இலங்கை அரசு, ஏற்கனவே தமிழர்களின் இடங்களை கைபற்றி இராணுவ முகாம்களை அமைத்துள்ளது.
தற்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல திட்டங்களின் பெயர்களைச் சொல்லி, தமிழர்களின் நிலங்களை கைப்பற்ற தொடங்கி இருக்கிறது இலங்கை அரசு.
இந்த பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பின்னர் சீனாவிடம் கையளிக்கப்படும்.
அப்படி நடக்கும் பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா வலுப்பெற்று தனது தளத்தை அமைக்கும்.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்தியா கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர்கள் என்றுமே இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள். எனவே ஈழத் தமிழர்கள் நலனை கவனத்தில் கொள்ளவில்லையெனில், இந்தியா பாதுகாப்பு விடயத்தில் சீனாவிடம் வலு இழக்கும் என்பதையும் இந்தியா மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.