அண்மையில் வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனின் விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கே பொலிஸாரினால் அலட்சியமான பதில் வழங்கப்பட்டது எனில் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 05ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனை இன்று வெள்ளிக்கிழமை பார்வையிடச் சென்று இவ் விடயம் தொடர்பில் கேட்டறிந்தமையுடன் அவர் தாக்குதலுள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் சம்மந்தமாக வவுணதீவுப் பொலிஸ் நிலையத்திற்கும் சென்று வினாவியிருந்தார்.
இதன் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் நாகலிங்கம், தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் லோ.தீபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில், இளைஞனுடனும் அவர் குடும்பத்தினருடனும் கலந்துரையாடியமையோடு அவரது தாக்குதல் தொடர்பில் உரிய நீதி விசாரணை நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் வவுணதீவுப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியைச் சந்தித்தார்.
மேலும் இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த 05 ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் ரூபன் என்ற இளைஞர் பொலிசாரினால் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில், விசாரணைகள் எவ்விதம் முன்னெடுக்கப்படுகின்ற என்பது குறித்து வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியிடம் கோரியபோது இது தொடர்பில் தன்னால் எவ்விடயங்களும் சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கடந்த 05 ஆம் திகதி நடந்த சம்பவம் தொடர்பில் இன்று 17 ஆம் திகதி வரையிலும் எந்தத் தகவலும் சொல்ல முடியாது என்றால் மக்கள் எவ்வாறு காவல்துறையை நம்புவது.
இன்று எமது மாவட்டத்தில் பொலிசாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனுக்கு நீதி கேட்க முடியாத நிலையில் அரசாங்கத்தைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
அவர்கள், இது தொடர்பில் அறிக்கையில் கூட ஒன்றும் சொல்ல வில்லை. அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியற் கைதிகள் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர்கள் எதுவித மூச்சும் விடவில்லை.
இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா? மண் மாபியாக்களின் பிரதிநிதிகளா? வவுணதீவப் பொலிஸ் அதிகாரி சொல்கின்றார் தான் இதற்குப் பதில் சொல்ல முடியாது என்று.
நாட்டின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதி ஒருவர் கேட்கும்போதே எவ்வித பதிலும் சொல்ல முடியாது என்கிறார்கள் என்றால், சாதாரண மக்களுக்கு எவ்விதமான பதிலை இவர்கள் சொல்லப் போகின்றார்கள்.
தெலைபேசியில் கேட்கையில் நேரடியாக வாருங்கள் என்று சொல்லிவிட்டு நேரடியாக வரும் போது தகவல் சொல்ல முடியாது என்று சொல்லுகின்றார்.
தாக்கப்பட்ட நபர் ஒரு பொலிஸ் அதிகாரியின் பெயரைக் குறிப்பிடுகையில் அவரின் பெயரில் எத்தனையோ நபர்கள் இருக்கலாம் என்றும் அது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இடம்பெறவில்லை என்றும் அலட்சியமான பதில்களையே சொல்லுகின்றார்கள்.
இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயங்களாக இல்லை. பொலிஸார் மக்களை இவ்வாறாகக் கையாள வெளிக்கிட்டால் இந்த நாட்டில் இதற்கு மேலும் தமிழ் மக்கள் வாழ முடியாத நிலைமையே ஏற்படும்.
இந்த மாவட்ட மக்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும்.
நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கையாள்வதற்குரிய முயற்சிகளை எடுத்து வருகின்றேன்.
ஆனால், மாவட்டத்திலே அரசுடன் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மண் மாபியாக்கு வேலை செய்யாமல் மக்களுக்காக வேலை செய்ய முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.











