கிராமிய குளங்களின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஓர் அங்கமாக பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி தெற்கு கிராமத்தின் முறாவில் குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை ஆரம்பித்து வைத்ததுடன், திட்டத்தின் பெயர்ப் பலகையையும் திரைநீக்கம் செய்தார்.

இந் நிகழ்ச்சித் திட்டமானது நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகிறது.

அதன்படி, முறாவில் குளத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 4,246,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்பாடுகள் 4 மாதங்களில் நிறைவடைந்து பெரும்போக நீர்ச்சேமிப்புக்கு தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முறாவில் குளமானது புலோலி தெற்கு கிராமத்தின் பிரதான குளமாக விளங்குவதுடன், வல்லிபுரம், துன்னாலை வடக்கு மற்றும் முறாவில் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சிறுதானிய பயிர்ச்செய்கைகளுக்கான நீர்த்தேவையையும் பூர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *