சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 முதிரை மரக்குற்றிகள், பூநகரி பொலிஸாரால், இன்று (21) அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.
இலுப்பக்கடவையில் இருந்து டிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் மறைத்து மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, பொலிஸாரால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, இன்று அதிகாலை, சங்குபிட்டி பாலத்தருகில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வைத்து குறித்த டிப்பர் வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அதில், கருங்கற்களால் சூட்சுமமாக மறைத்து மரக்குத்திகள் எடுத்து செல்லப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சாரதி் கைது செய்யப்பட்டு, பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த மரக்குற்றிகள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.