இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புதிய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று (20) மாலை கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆணைக்குழு இணங்கவில்லை என அந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை ஆராய்ந்து, நாட்டிலுள்ள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் 09, 11 மற்றும் 13 ஆவது சரத்துகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சிறந்த ஜனநாயக ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்காக மூன்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஒன்பதாவது சரத்தில் காணப்படும் தடுப்புக் காவல் உத்தரவை அமுல்படுத்தும் போது, குறைந்தபட்சம் 3 மாதம் அல்லது அதற்கு மேல் தடுத்து வைக்கப்படும் நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை சமர்ப்பித்து, வழக்கை நிறைவு செய்ய வேண்டும்.
11 ஆவது சரத்தில் காணப்படும் வகையில் தடுப்புக்காவலில் சிறையில் வைக்கப்படும் நபரை, சிறைக்கு பதிலாக விசேட பாதுகாப்பின் கீழ் சந்தேகநபரின் வீட்டில் அல்லது கிராமத்திலுள்ள ஒரு பகுதியில் தடுத்து வைக்க கூடியதாக இருக்கும்.
13 ஆவது சரத்தில் காணப்படுகின்ற வகையில், ஜனாதிபதிக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு குறைந்தபட்சம் 3 பேர் அடங்கிய அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோசனைக்குழுவை நியமிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 21 மற்றும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதிகளில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியூடான புதிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்களும் ஏனைய குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு பல பரிந்துரைகளையும் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள், பரிந்துரைகள் தொடர்பில் விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யுமாறு புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D. நவாஸ் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி, யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.