
முதலாம் திகதியுடன் ஊடரங்கு நீக்கப்படும், அதுவரையான 10 நாள்களும் ஊரடங்கு நீடிப்பு, மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி, நாள்பட்ட நோயுள்ள மாணவருக்கு முன்னுரிமை, பாடசாலைகளைத் திறக்க இணைந்து பணியாற்றவும், ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானங்கள்.
நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், அன்றையதினத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுவிடும். அதற்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்காது– என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றுத் தெரிவித்தது.
கொரோனா ஒழிப்புச் செயலணியின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில், வீடியோ தொழில்நுட்பத்தினூடாக நேற்று நடைபெற்றது. அதில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டிருந்தநிலையிலேயே, அது முதலாம் திகதிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய கூட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டே, நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியுடன் நீக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவர்களுக்கு தடுப்பூசி
இந்தக் கூட்டத்தின்போது, பிள்ளைகளுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து உரையாற்றிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன, “நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 12 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றுமாறு, விசேட சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது” என்றார். அத்துடன், “சிகிச்சையக (கிளினிக்) விசேட மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பின்கீழ், பெற்றோர்களின் அனுமதியுடன், அந்தச் சிகிச்சையகங்களுக்குள் வைத்து மாத்திரம் மேற்படி சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளில்கூட 12 – 15 வயதுக்கிடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்குரிய தடுப்பூசி ஏற்றல் தொடர்பில், இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், 15 தொடக்கம்19 வயதுக்கிடைப்பட்ட அனைத்துச் சிறுவர்களுக்குமான தடுப்பூசி ஏற்றலுக்குரிய பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
இதன்படி, நாட்டிலுள்ள 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட அனைத்துச் சிறுவர்களுக்குமான தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்தி முடிக்குமாறும் மருத்துவமனைகளுக்குள் வைத்து மாத்திரம் அவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலை முன்னெடுக்குமாறும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், அது தொடர்பில் அந்தச் சிறுவர்களின் பெற்றோருக்குத் தெளிவுபடுத்துவதன் அவசியத்தையும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்
விசேட மருத்துவ குழுவின் பரிந்துரைக்கமைய, அனைத்துச் சிறுவர்களுக்கும், பைஸர் தடுப்பூசியை மாத்திரம் ஏற்றுமாறும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
இளையோருக்கென
விசேட தடுப்பூசி இல்லை
தெரிவுசெய்யப்பட்ட தடுப்பூசிகளை மாத்திரமே இளைஞர் – யுவதிகள் எதிர்பார்க்கும் நிலைமை தோன்றியுள்ளது. அவர்களுக்கென விசேட தடுப்பூசியொன்று அறிமுகப்படுத்தப்படவில்லை. நாட்டு மக்களுக்கு ஏற்றப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் தரம்வாய்ந்தவை என்று விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் நீலிகா மலவிகே ஆகியோர் எடுத்துரைத்தனர். அதனால், விசேட தடுப்பூசியொன்று கிடைக்கும் வரை காத்திருக்காது, அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முன்வர வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
ஆயுள்வேத வைத்தியசாலைகளில்
கொரோனா சிகிச்சை நிலையம்
சிக்கல் நிலையுடன்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு ஆயுள்வேத சிகிச்சையளிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்காக, கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலைகளில், கொரோனா சிகிச்சை நிலையங்களை உருவாக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
மோட்டார் திணைக்கள
பணிகளைத் தொடரவும்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், காணிப் பதிவு அலுவலகம் போன்ற அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்த ஜனாதிபதி, இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் தலைவர்கள், உரிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
பொருளாதார அபிவிருத்தி
உயர்நிலையில் பேணப்படுகிறது
நிலவும் சவால்மிக்க நிலைமைக்கு மத்தியிலும், ஆண்டின் முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டுகளில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் வேகத்தை உயர்ந்த பட்சத்தில் பேண முடிந்துள்ளது எனக் கூறிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள், அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் நன்றி தெரிவித்தார்.
மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார வழிகள் என்பன எக்காரணங்கொண்டும் பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசிய சேவைகளை முன்னர் போன்று தொடந்து முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, அனைத்துப் பொருளாதார மத்திய நிலையங்களையும் தொடர்ந்து திறந்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
பாடசாலைகளைத் திறக்க
இணைந்து பணியாற்றவும்
200க்கும் குறைவான மாணவர் கொள்ளளவைக் கொண்டுள்ள கிராமிய பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலும், கூட்டத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது. இது விடயத்தில், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் அனைவரும், கல்வி அமைச்சுடன் இணைந்துப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து, பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டுமென்றும், இதன்போது எடுத்துரைக்கப்பட்டது. – என்றுள்ளது.