கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு தடையுத்தரவு

சம்பூர் பொலிஸ் பிரிவில் கறுப்பு ஜூலை படுகொலையை நினைவுகூர தடை உத்தரவு வழங்கி மூதூர் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

சம்பூர் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்து ஒரு குழுவினருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் 23 ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு தரப்பினர் தயாராகி வருவதாக பொலிஸார் மன்றுக்கு தெரிவித்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர், முத்தூர் நீதிவான் பாஸ்மிலா பானு, வெருகல் பிரதேச சபையின் துணைத் தலைவர் தேவநாயகம் சங்கர், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேஷபிள்ளை குகன் உள்ளிட்டோருக்கு தடை உத்தரவு கட்டளையை வழங்கினார்.

1983 ஆம் ஆண்டு, ஜூலை 23 ஆம் திகதி திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இதில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், காயப்படுத்தப்பட்டனர்.

தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் எரித்து அழிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன.

தென்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அகதிகளாக வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஈழத் தமிழரின் வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாகவும், அழிக்க முடியா வரலாற்றுப் பதிவாகவும் கறுப்பு ஜூலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *