ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் இல்லை : ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீறியதா அரசாங்கம்..!

ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் இல்லாத நிலையில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் தற்போது கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுட்டிக்காட்டினார்.

தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பை பொருத்தமான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீறும்வகையில் இது அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை நாட்டில் உண்மையில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்துவிட்டதாக பொதுமக்களிடம் கூறப்பட்டு வருகிறது, ஆனால் உண்மையில் பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையே 50 சதவிகிதம் குறைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே உண்மையான நிலவரத்தை அறிய பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை 25,000 முதல் 30,000 ஆக அதிகரிக்குமாறும் ஹர்ஷன ராஜகருணா அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *