ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்குப் பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரைச் சென்றடைந்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்றார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில், இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தொடர், ‘கொவிட்-19 வைரஸ் பரவலிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்குப் பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளிலேயே இடம்பெறவுள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக பல நாடுகளின் அரச தலைவர்கள் தற்போது நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளனர்.
அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும், வியாழக்கிழமை இடம்பெறும் உணவுக் கட்டமைப்பு மாநாட்டிலும், வெள்ளிக்கிழமை இடம்பெறும் எரிசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலிலும் அவர் கருத்து வெளியிடவுள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரின் பின்னர் ஜனாதிபதி பல அரச தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





