தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 67 வயதுடைய தனது தந்தையை கடுமையான முறையில் தாக்கிய 19 வயது மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கோரச் செயலுக்குப் போதை வஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, வாழைச்சேனை பொலிஸார், அவரது மகனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவித்தனர்.


