மனோலி தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கமாண்டன்ட் முஹமது ஷா நவாஸ், மற்றும் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் கடலோரப் படை வீரர்கள், வன ஊழியர்கள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஹோவர் கிராப்ட் மூலம் இன்று காலை கூட்டு ரோந்து சென்றனர். அப்போது மனோலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நாட்டுப்படகை கைப்பற்ற கடலில் முயன்றனர்.
ஹோவர் கிராப்ட் விரைந்து வருவதை அறிந்த நாட்டுப்படகில் இருந்த 4 பேர் தப்பி ஓடினர். பதிவெண் இல்லா நாட்டுப்படகு, அதிலிருந்த கடல் அட்டை மூட்டைகளை மண்டபம் இந்திய கடலோக்காவல் படை முகாம் கொண்டு வந்தனர். மூட்டைகளை பிரித்தபோது அதில் பதபடுத்தப்படாத பச்சை கடல் அட்டைகள் ஆயிரத்து 500 கிலேர் இருந்தன. இக்கடல் அட்டை மூடைகளை மண்டபம் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டன.
இதேபோல் உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனப் பாதுகாப்பு படை, வன காவல் படை இணைந்து தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடமிருந்த 35 கிலோ கடல் அட்டை மற்றும் 200 கிராம் கடல் குதிரைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தேவிபட்டினத்தைச் சேர்ந்த முகமது யாசர் அலி என தெரிந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.





