நாட்டில் முன்று முக்கிய பொருட்களுக்கான விலைகள் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் விலை குழுவினால் நடத்தப்பட்ட கண்காணிப்பின் பிரகாரம், வாழ்க்கைச் செலவுக் குழுவின் அனுமதியுடன் இந்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார்.
இந்த பொருட்களுக்கான விலை, சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள பின்னணியில், குறித்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கடந்த 6 மாத காலமாக கோரியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வாழ்க்கை செலவுக் குழுவின் இறுதி அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், குறித்த பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 940 ரூபாவாக இருக்கும் போது, சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் பால் மாவின் விலை 3070 டொலராக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அதே பால் மா ஒரு மெற்றிக் தொன்னின் தற்போதைய விலை 3700 டொலர் என அவர் குறிப்பிட்டார்.
இதனால், எதிர்வரும் தினங்களில் குறித்த மூன்று பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 12 ரூபாவால் அதிகரித்தமையும் சிமெந்து பைக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.





