ரம்புக்கனையில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கம்

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர்.

எனினும், அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

எவ்வாறிருப்பினும் முச்சக்கர வண்டிக்கு குழுவொன்று தீ வைத்துள்ளதாகவும் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீ வைக்க முற்பட்ட குழுவினரை கலைக்கும் முயற்சியாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் இதனையடுத்து, அங்கு ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அங்கு நேற்று முன்தினம் இரவு முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த குருவிட்டகே டொன் சமிந்த லக்ஷான் (42) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, இந்த சம்பவத்தில் மொத்தமாக 32 பேர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட 27 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *