
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்தினவை நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைக்கமையவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனையில் ஒருவர் உயிரிழக்க காரணமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தமது குழுவினர் நேற்று சென்று விசாரணைகளை முன்னெடுத்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்ட நபர் மற்றும் துப்பாக்கி ரவைகளை பயன்படுத்தியதற்கான காரணத்தினை கண்டறிவதற்கான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது