ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
நேற்றுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் விசேட நினைவு கூரல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கொழும்பில் அருட்தந்தையர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் , பௌத்த மதகுமார்கள் பேரணியாகச் சென்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இஸ்லாமிய மதப் பிரதிநதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதன் போது அருட்தந்தையர்களால் அங்கிருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மேலும் நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து செவ்வாய்கிழமை சிலுவையை சுமந்தபடி கொழும்பு நோக்கி பயணித்த நடிகர் ஜெகான் அப்புஹாமியும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


