ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்கள்: 31பேர் உயிரிழப்பு- 87பேர் காயம்

ஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு குண்டுவெடிப்புகளில், குறைந்தது 31பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர்.

முதல் குண்டுவெடிப்பு பால்க் மாகாணத்தில் உள்ள மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்டது. இதில் 12பேர் உயிரிழந்தனர். 58பேர் காயமடைந்தனர். 32 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு ஒப்புக்கொண்டது. தலிபான்கள் தாங்கள் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்பை தோற்கடித்துவிட்டதாக கூறுகின்றனர. ஆனால் இந்த குழு ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களுக்கு கடுமையான பாதுகாப்பு சவாலாக உள்ளது.

மஸார்-இ-ஷரீஃப் மசூதியின் மீது தாக்குதல் தொழுகையாளர்களால் கட்டிடம் நிரம்பியிருந்தபோது தொலைவில் வெடிக்கச் செய்யப்பட்ட கண்ணி வெடியைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று சன்னி முஸ்லிம் ஐ.எஸ் ஜிஹாதிகள் தெரிவித்தனர்.

இந்தக் குழு அதன் முன்னாள் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர்களின் மரணத்திற்கு பழிவாங்கும் உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இத்தாக்குதலை அழைத்தது.

குண்டூஸில், தலிபான் அரசாங்கத்தில் பணிபுரியும் வாகன திருத்துனர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்து சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 18பேர் காயமடைந்தனர் என்று பொலிஸ்துறை செய்தித் தொடர்பாளர் ஒபைதுல்லா அபேடி கூறினார்.

வீதியோர குண்டுவெடிப்பு, இராணுவ வாகன திருத்துனர்களின் வேனை இலக்காகக் கொண்டது என்றும் காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளதாகவும் உட்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காபூலில் மற்றொரு வீதியோர குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, காபூலின் ஷியா பகுதியிலுள்ள பாடசாலைக்கு வெளியே இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர். அந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

மனித உரிமைகள் தொடர்பான ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ரிச்சர்ட் பென்னட் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *