கைக்குழந்தையுடன் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலையில் தமிழகத்திற்கு வந்தோம்! இளம் குடும்பஸ்தர்

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேரடங்கிய குடும்பம் மற்றும் தனி நபர் ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து நேற்று (21) இரண்டு படகுகளில் மன்னார் அடம்பன் மற்றும் உயிலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த பிரதீப், கஸ்தூரி, சுமித்ரா, நகுஷன்,பியோனா, நகுலேஸ்வரன் என நான்கு மாத கர்ப்பிணி பெண் ஒன்றரை வயது சிறுவன் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 இலங்கை தமிழர்கள் வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களும்,அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவரும் உள்ளடங்களாக 5 பேர் இன்று (22) வெள்ளிக்கிழமை அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே தனது நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கு பாதுகாப்பாக குழந்தை பிறப்பதற்காக தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது பால் மாவு மற்றும் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தனது ஒன்றரை வயது குழந்தையை வைத்து இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வரும் நாட்களில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் தமிழகத்திற்கு குடும்பத்துடன் அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்குப் பின் இந்த 18 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை 60 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *