யாழ்ப்பாணம், ஏப் 23
விபத்துக்கு சிகிச்சை அளிப்பதை விட விபத்து ஏற்படும் முன்னரே அதனை தடுப்பது மிகவும் அவசியமானது என யாழ் போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிளை தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா வாகனம் விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த மூவரில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விபத்துக்களை தடுப்பதற்கான ஒரு செயற்றிட்டமொன்று வடமாகாணத்தின் முன்னெடுக்கப்பட இருந்தாலும் கூட கொரோனா காரணமாக செய்ய முடியாமல் போய்விட்டது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்து கூட புகையிரதக் கடவையில் உள்ள வீதி அமைப்பு முறையால் ஏற்பட்டதே. விபத்துக்கு சிகிச்சை அளிப்பதை விட விபத்தை முன்னரே ஏற்படும் நிலை அதனை தடுப்பது மிகவும் அவசியமானது.
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ,வடமாகாண ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், புகையிரத திணைக்களத்தினர் போன்றவர்களுடன் கலந்துரையாடி இதற்கு ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விரைவில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும்.
மேலும் இந்த பகுதியில் விபத்து ஏற்பட்ட பின்னர் பொதுமக்களால் சில சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபோதும் விபத்தினை தடுக்காது மேலும் விபத்து அதிகரிக்கவே வழி செய்யும். புகையிரத கடவை கடக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செல்வது அவசியம் ஆனாலும் விபத்து நடந்த இடத்தில் அவதானமாக கடந்து செல்லுமாறு எழுதப்பட்டிருந்த போதும் அது தெளிவின்மை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றார்.


