
கொழும்பு, ஏப் 24
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன். இந்நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் நிதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்தார்.
எவ்வாறாயினும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியானது கட்டுப்பாட்டு விலையை மீள அமுல்படுத்துவதில் தடையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரிசி, கோதுமைமா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.