யாழில் குடும்பஸ்தரிடம் சிலிண்டர், பணம் கொள்ளை – ஒருவர் கைது!

யாழ் மாநகரில் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்ற குடும்பத்தலைவரை வழிமறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு சிலிண்டர் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த நால்வரில் ஒருவர் சில மணிநேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து எரிவாயு சிலிண்டர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு 9 மணியளவில் இந்த வழிப்பறிக்கொள்ளை இடம்பெற்றது.

வீதியில் சென்ற குடும்பத்தலைவரை மறித்த நால்வர் தம்மை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனத் தெரிவித்து அவரை மிரட்டி அவர் எடுத்துச் சென்ற எரிவாயு நிரப்பிய சிலிண்டர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அபகரித்து தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் இடம்பெற்று சில மணிநேரங்களிலேயே கந்தர்மடத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து எரிவாயு நிரப்பட்ட சிலிண்டர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டன.

ஏனைய மூவரையும் கைது செய்ய தேடி வருவதாகப் பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *