வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் இல்லாமையால் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த வாய் மூலமான கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக வடக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் பேசி உரிய தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நாடுமுழுவதும் தபால் மற்றும் உப தபாலகங்களை அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், எதிர்வரும் வருடங்களிலும் கட்டட நிர்மாணங்கள் இடம்பெறாத போதிலும், அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போதும் இந்த மாகாணத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.