
இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின ஊர்வலம் இம்முறை பெரும் எழுச்சியுடன் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளைக் கூட்டம் நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது.இதன் போது தந்தை செல்வாவின் நினைவு தினம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.நாளை மறுதினம் நினைவு இடத்தில அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர்,நினைவு உரைகள் இடம்பெறும்.
அத்துடன் நூல் வெளியீடும் இடம்பெறும்.அண்மையில் இடம்பெற்ற கட்சியின் உயர் மட்டக் கலந்துரையாடலில் மே தினத்தை எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்பட்டது.
அதனடிப்படையில் இம்முறை தொழிலாளர் தினத்தை கிழக்கில் மட்டக்களப்பிலும் ,வடக்கில் கிளிநொச்சியிலும் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் ஆர்மபிக்கும் மே தின பேரணி,டிப்போ சந்தியில் நிறைவு பெற்று அங்குள்ள பூங்காவில் கூட்டம் இடம்பெறும்.
நாட்டு நிலவரம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.கோட்டா அரசு விலகியே ஆக வேண்டும்.பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகளை பெற்று வந்தவர்கள் இவர்கள் . மக்களே இவர்களை வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள்.
நாட்டுச் சொத்துக்களை அழித்த இவர்கள் இருக்கக் கூடாது என்று ,அனைத்து மக்களுமே விரும்புகிறார்கள்.வடக்கிலும் மக்கள் தமது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள் என்றார்.