பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் உத்திகளை மறுபரிசீலனை செய்யுங்கள்: ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரைவான நிதி முயற்சிக்கு இலங்கை தகுதிபெறாததாலும், இந்திய கடன் வரி அடுத்த மாதம் முடிவடைவதாலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது உத்திகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சில இலங்கை வங்கியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், பொருளாதாரம் மேலும் சீரழிந்து போவது குறித்து எச்சரித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது.சுமார் 30 சதவீத உரம் ரஷ்யாவிலிருந்து வருகிறது, அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை ஒரு பிரச்சினையை சந்திக்கப் போகிறது.நாம் உணவுப் பற்றாக்குறையை சந்திக்கப் போகிறோம்.

மேலும் நிலையான வைப்புத்தொகைகளில் வைத்திருக்கும் நிதிகளின் மதிப்பு மற்றும் EPF மற்றும் ETF நிதிகள் வைத்திருக்கும் நிதிகளின் மதிப்பு குறைந்தது 59 சதவிகிதம் குறையும். 30 வயது நிரம்பிய ஒருவர் இந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியும். இருப்பினும், ஓய்வு பெறவிருக்கும் ஒரு நபர் எப்படி நிலைமையை சமாளிக்க முடியும்?

2020 இல் இந்த பொருளாதார நெருக்கடி பற்றி நாங்கள் எச்சரித்தோம். 2021 இல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம். இது நடக்கவில்லை. எனவே பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான உத்திகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய திட்டத்தை தொடங்க வேண்டும்” என ரணில் விக்கிரமசிங்க மேலும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *