
அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் மிகுந்த நிதானத்துடன் செயற்பட வேண்டுமென அரசாங்கம், பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப் படையினர் ஆகிய தரப்பினரிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று பிற்பகல் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தை அண்மித்த பகுதிகளில் அதிக அளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை மற்றும் குறித்த பகுதிக்கு செல்லும் வீதிகள் முடக்கப்பட்டுள்ளமை ஆகிய நடவடிக்கைகள் நிலைமை மோசமடையும் சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் கூட காலிமுகத்திடல் பகுதிக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கூர்மையான இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தியும், கறுப்பு நிற பொருட்களினால் மூடியும் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளின் காரணமாக மக்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து தரப்பினரும் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் மிகுந்த நிதானத்துடன் செயற்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும், அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் மக்களின் உரிமையையும், மக்களின் நடமாடும் சுதந்திரத்தையும் உறுதி செய்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் கடமைப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலப்பகுதியில் இடம்பெறும் வன்முறை எதுவாக இருந்தாலும் அது நாட்டுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.