ஊர்காவற்துறையில் மதுபான நிலையம் அமைக்கும் முயற்சி! தற்காலிகமாக தடுத்து நிறுத்தம்

ஊர்காவற்துறையில் மதுபான விற்பனை நிலையம் அமைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை கரம்பொன் சண்முகநாதன் பாடசாலையை அண்மித்த பகுதியில் அரசியல் கட்சியொன்றின் ஆதரவோடு தனியாரொருவரால் மதுபான விற்பனை நிலையமொன்று அமைக்கப்படவிருந்தது .

மேற்படி நாசகார செயற்பாட்டுக்கெதிராக தீவக சிவில் சமூக அமைப்பு உள்ளிட்ட பல பொது அமைப்புக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தன .

குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு தீவகம் வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பு தீவக சிவில் சமூகத்தினரால் ( islands civil society ) எதிர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது .

இப்போராட்டத்தின் பயனாக பெருமளவான ஊடகங்களின் பார்வையில் மேற்படி மதுபான நிலைய விவகாரம் தென்பட்டிருந்ததோடு அனைத்து தரப்பினரதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது .

இந்நிலையில் தீவகம் வடக்கு பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் மேற்படி பொது அமைப்புக்களுக்கும் மதுபான வரி திணைக்களத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றிருந்தது .

பொது அமைப்புக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஊர்காவற்துறையில் மதுபான விற்பனை நிலையம் அமைக்கும் முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது .

இக்கலந்துரையாடலில் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி, ஊர்காவற்துறை பொது சுகாதார பொறுப்பதிகாரி மருத்துவர் நந்தகுமார் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.கனகையா , தீவக சிவில் சமூக பொருளாளர் கருணாகரன் குணாளன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் (சின்னமணி ) , சிவநாதன் , மெலிஞ்சிமுனை கத்தோலிக்க தேவாயலய பங்குத்தந்தை ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *