
கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று திங்கட்கிழமை 17ஆவது நாளாகவும் தொடர்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று காலி முகத்திடலுக்கு செல்லவிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இறுதியில் அவர்களை அங்கு அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இது போராட்டங்களின் தாக்கங்களை அரசாங்கம் தாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது.
இதற்கு காரணம், ஏற்கனவே சர்வதேச நாணய நிதியப் பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கம், றம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவமாக இருக்கலாம்.
இதற்காக எதிர்ப்பும், வன்முறையற்ற கீழ்ப்படியாமையும் அமைதியான போராட்டக்காரர்கள் தங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் வைத்திருக்கும் மிக முக்கியமான ஆயுதங்களாகும்.
இந்தியாவில் காந்தியப் போராட்டங்கள் முதல் வியட்நாம் போர் மற்றும் அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிலாய்ட் போராட்டம் வரை இவ்வாறான நிகழ்வுகளே இடம்பெற்றிருக்கின்றன.
வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்கள், இசையையும் கலையையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தின.
இதுவே இன்று காலிமுகத்திடலிலும் இடம்பெறுகிறது. இளைஞர்கள் இசை கலந்த நிலையில் தமது போராட்டங்களை முன்கொண்டு செல்கின்றனர்
இதில் அய்யா சுனாமி! மல்லி கொரோனா! என்ற கோசம் இளம் தலைமுறையினர் பலருக்கு புரியவில்லை.
2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை நிவாரண நிதியை முறைகேடு செய்ததாக மஹிந்த ராஜபக்ச(அய்யா) மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.பின்னர் அது மறுக்கப்பட்டது
அதேபோன்று கொரோனா தடுப்பூசிகள் 10 டொலருக்கு 15 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக (பின்னர் அது மறுக்கப்பட்டது) கோட்டாவின்(மல்லி) மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே இந்த கோசம் எழுப்பப்படுகிறது.
இதேவேளை இளைஞர்களின் எதிர்ப்புகள் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் பாடம் கற்பிப்பது போன்று அமைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எனவே போராட்டங்களுக்கு உரிய பதில் தரப்படுவது அவசியம். இல்லையேல், இலங்கை தோல்வியடைந்த நாடு என்ற கேவலத்தை தேடித்தந்தவர்கள் என்ற பட்டத்தை அரசாங்கத்தரப்பினரும் எதிர்கட்சியினரும் பொறுப்பேற்கவேண்டியிருக்கும்.