ஐ.பி.எல்.: லக்னொவ் அணி சிறப்பான வெற்றி- மும்பை அணிக்கு தொடர்ச்சியான எட்டாவது தோல்வி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மும்பை- வான்கடே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களையும் மணிஷ் பாண்டே 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், கிய்ரன் பொலார்ட் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டேனியல் சேம்ஸ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 39 ஓட்டங்களையும் திலக் வர்மா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், குர்ணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் மோஷின் கான், ஜேஸன் ஹோல்டர், ரவி பிஷ்னோய் மற்றும் ஆயுஸ் பதோனி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 12 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார். நடப்பு தொடரில் கே.எல். ராகுலின் இரண்டாவது சதம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *