உலகப் புகழ் பெற்றுள்ள இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா ,இந்திய –இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ளார்.
இதனை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
மூன்று மாத குறுகிய காலத்தினுள் ‘மெனிக்கே மகே ஹத்தே’ என்ற பாடல் மூலம் பலரையும் கவர்ந்தவர் தான் இளம் பாடகி யொஹானி டி சில்வா.
யொஹானியை வெகுவாகப் பாராட்டியுள்ள இந்திய தூதரகம், இவரது பாடல் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் ஒலிப்பதாகவும் பிரபலங்கள் இப்பாடலை இரசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கை – இந்திய கலாசார பாரம்பரிய உறவுகளுக்கு இவரது பாடல் மீள் பிரவேசத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு வருமாறு,
“இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாசாரத்தூதுவர் யொஹானி டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்கிறோம். யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிகதடவைகள் பார்க்கப்பட்ட ‘மெனிகே மகேஹிதே’ பாடல், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவில் பல மில்லியன் மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. இது, பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின் ஆழத்தை, பிரதிபலிக்கின்றது.”
இதேவேளை, இவரது பாடல் Youtube தளத்தில் 117 மில்லியன் Views ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.