
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி கண்டியில் இருந்து இன்று ஆரம்பமாகவுள்ளது.
எதிர்ப்பு பேரணி இன்று காலை 9.30 மணிக்கு கண்டியில் இருந்து ஆரம்பமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
வியாழன் அன்று மாவனல்லையில் இருந்து கலிகமுவ வரையும், கலிகமுவவில் இருந்து தனோவிட்ட வரையும் இந்த எதிர்ப்பு பேரணி பயணிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி தனோவிட்டயிலிருந்து யக்கலை வரையும், 30ஆம் திகதி யக்கலவில் இருந்து பேலியகொட வரையும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.
மே தினத்தை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி கெம்பல் பூங்காவில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
அரசாங்கம் பதவி விலகுமாறு கோரியும், பொதுமக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்துள்ளார்.