யாழ். காட்டுப்புலம் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக போர்க்கொடி 

யாழ். காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர், இடம் மாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை, யாழ். காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களது பெற்றோர்கள் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பாடசாலை அதிபர் இடம்மாற வேண்டாம் எனக்கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

தமது சுயவிருப்பின் அடிப்படையில் இடம் மாறவிருக்கும் குறித்த அதிபர், மேலும் இரண்டு வருடங்கள் எனினும் தமது பாடசாலையில் நீடிக்க வேண்டும் என மாணவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதிய அதிபர் வேண்டாம் என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்த பெற்றோர்களில் ஒருவர் சமூகம் மீடியாவிற்கு  கருத்து தெரிவிக்கையில்,

அதிபரினை இடம் மாற்ற வேண்டாமென பாடசாலை சமூகம் ஊடக கடிதம் ஒன்றினை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தோம். எங்களுக்கு வேறொரு அதிபர் வேண்டாம் . இந்த அதிபரே எமக்கு மீண்டும் வேண்டும் . ஆசிரியர்கள் குறைந்தளவில் இருக்கின்ற சூழ்நிலையில் மாணவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்தி இருக்கிறார். 35 வருட காலத்திற்கு பின்பு ஒரு மாணவனை புலமைப்பரிசிலில் சித்தியடையச் செய்து கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்து உள்ளார். எனவே இவ்வதிபரை இழக்க தயாராக இல்லை .

மேலும் அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கிஷ்ணராஜா கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பாடசாலையின் அதிபர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பொறுப்பேற்று சிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக புலமைப்பரிசில் எந்தவொரு மாணவனும் சித்தியடையாத நிலையில், இவ்வதிபர் ஒரு மாணவனை 178 புள்ளிகளைப் பெறுவதற்கும் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலாகவும் பெறுவதற்கு முன்மாதிரியாக செயற்பட்டிருக்கிறார்.

அதிபரின் இடம் மாற்றத்தினால் பெரும் கவலை அடைகிறோம் . மீண்டும் இந்த அதிபர் சேவையில் கடமை ஆற்ற வேண்டும் என விரும்புகிறோம் . பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சியில் துயருற்றுள்ளார்கள்.

எனவே அதிபர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் சென்றாலும் இதற்குப்பதிலாக ஒரு அதிபரினை நியமனம் செய்ய வேண்டும் மற்றும் தரம் ஒன்றிற்கான ஆசிரியர் வெற்றிடத்தினையும் பூர்த்தி செய்து தர வேண்டும். இவ்வாறான பாடசாலைகளின் குறைகளை நீக்கி தருமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் நலன்புரி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *