பொன்னாலையில் காணிசுவீகரிப்பு சம்பவம்! தற்காலிகமாக தடுத்து நிறுத்தம்

யாழில் காணிகளை சுவீகரிக்க வந்தவர்களை காணி உரிமையாளர்கள் பொன்னாலை சந்தியில் வைத்து திருப்பி அனுப்பிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளாரும் சட்டத்தரணியுமான சுபாஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மக்களுக்குச் சொந்தமான காணிகளை கடற்படையினருக்கு மக்களினுடைய சம்மதத்திற்கு மாறாக சுவீகரிப்பதை எதிர்த்து காணி உரிமையாளர்களுடன் மக்களும் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து தற்காலிகமாக காணிகளை சுவீகரிப்பதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.

தமிழர் தாயகத்தின் ஒரு அங்குலத்தினையேனும் பறி போவதை அனுமதிக்க மாட்டோம்.

தென்னிலங்கையிலே உள்ள சிங்கள மக்கள் நடைமுறையில் உள்ள அரசாங்கத்திற்கும் ஆட்சிக்கும் எதிராக பாரிய போராடடத்தினை முன்னெடுத்து வருகின்ற வேளையில், வடகிழக்கிலே தமிழர் தாயகம் அமைதியாக இதனை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

தமிழர்களின் அபிலாசைகளுக்காக தென்னிலங்கை மக்கள் குரல் கொடுப்பார்களா?என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இதேவேளை சிங்கள,பௌத்த பேரின அரசு தமிழர் தாயகத்திலே தங்களின் கட்டமைப்பு நிகழ்ச்சிநிரலை தொடர்ந்து முன்னெடுத்து தமிழர் தயக்கத்தை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டை நிறுத்தவில்லை என்ற செய்தியினை தமிழர்களுக்கு கூறியிருக்கிறது.

தமிழர்களின் உரிமைகளுக்காக தென்னிலங்கை சிங்கள சகோதரர்கள் குரல் கொடுத்து போராடாத வரை தமிழ் மக்கள் மறைமுக ஆதரவை கொடுப்பார்களே தவிர நேரடியான ஆதரவினை கொடுக்க தயங்க வேண்டி இருக்கும் ஏனெனில் இரு தரப்பினர்களின் பாதிப்புக்கள் வேறாக உள்ளது.

மேலும் காணி உரிமையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

கடற்படையினர் அத்துமீறி கட்டடம் அமைத்ததால் அதை வெளியேற்றுவதற்கு பல முயற்சிகளை எடுத்திருக்கிறேன். அரச அதிபர் மற்றும் பிரதேச செயலகம் ஊடக 5 வருடங்கள் பல முயற்சிகள் எடுத்தும் பயனளிக்கவில்லை .

பிரதேச செயலகத்திலிருந்து இதற்கு நஷ்ட ஈடாக பணம் தந்து அளவீடு செய்வதாக பதில் கூறி இருக்கிறார்கள். என்றாலும் இதற்கான முடிவுகள் 6 வருடங்களாகியும் கிடைக்கப்பெறவில்லை.

பின்பு பிரதேச சபையால் எல்லை போடுவதாக கூறி கடிதம் வந்ததனை பொதுமக்களாக சேர்ந்து தடத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *