கிழக்கு மாகாணத்தின் விளையாட்டு திணைக்கள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் இவர் அகில இலங்கை ரீதியில் வளந்தோர்களுக்கான Masters Athletics Sri Lanka (Affiliated World Masters Athletics, Asian Masters Athletics, Athletics Association Of Sri Lanka) வினால் நடாத்தப்பட்ட திறந்த விளையாட்டுப் போட்டி கடந்த 23 மற்றும் 24.04.2022 திகதிகளில் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ப.ஜெயகுமார் 55 – 60 வயதிற்குற்பட்ட திறந்த போட்டியில் கோலூண்றி பாய்தல் (Polevault) நிகழ்வில் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் வென்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
களுதாவளையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடமாக கொண்ட இவர் 1972-1978 காலப்பகுதியில் களுதாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் போது விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளதுடன், மேலும் உயர் கல்வி தொடர்வதற்காக மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சேர்ந்து 1979-1984 வரை இப்பாடசாலையின் விளையாட்டுத்துறையில் திறமைகளை காட்டி மெய்வல்லுனர் போட்டிகளில் சம்பியன் பட்டத்தினை பெற்றுக் கொண்டதுடன், விளையாட்டு அமைச்சு மற்றும் இளைஞர் சேவை மன்றம் என்பவற்றினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பங்குகொண்டு பல சாதனைகளை தனதாக்கி பல பதக்கங்களை வென்றுள்ளார். மெய்வல்லுனர் விளையாட்டுக்களான 100M, 200M, நீளம்பாய்தல், கோலூண்றி பாய்தல், முப்பாய்ச்சல், தடைதாண்டல் மற்றும் அஞ்சல் ஓட்டங்களிலும் பங்கேற்று பல வெற்றிகளை தனதாக்கியதுடன் நின்றுவிடாது ஆரம்ப காலங்களில் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தில் பங்கேற்று பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்ததுடன் 1982-1993 வரை மட்டக்களப்பு பாடுமீன் விளையாட்டுக் கழகத்தில் பல மெய்வல்லுனர் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். விளையாட்டுத்துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான போட்டிகளில் பங்குகொண்டு பல்வேறுபட்ட மெய்வல்லுனர் விளையாட்டுகளில் வெற்றியீட்டி பிரதேசம், மாவட்டம் மற்றும் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையினை உத்வேகத்துடன் தொடர்ந்து காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது கடமையை திறம்பட செய்துவருவதனால் இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமையினை வெளிக்கொணர்வதற்கு காரணகர்தாவாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த 2020, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற வளந்தோருக்கான100M நீளம் பாய்தல் மற்றும் கோலூண்றி பாய்தல் போட்டிகளில் வெற்றியீட்டி முறையே வெள்ளிப்பதக்கத்தினையும், தங்கப்பதக்கத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுத்தந்துள்ளார். இவ்வருட இறுதிக்குள் Asian Athletics Charmpionship போட்டிகள் சீனாவில் நடைபெறவுள்ளதுடன், இப்போட்டியில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



