கிண்ணியா நகர சபையின் 49 ஆவது அமர்வு தவிசாளார் எம்.எம்.நிவாஸ் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி) தலைமையின் கீழ் நேற்று (25) மாலை பிற்பகல் 3.00 மணிக்கு இடம் பெற்றது.
கிண்ணியா நகர சபையில் மொத்தம் தவிசாளருடன் சேர்த்து 13 உறுப்பினர்களாகும்.
சபை நடவடிக்கை சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பமானது.
தவிசாளர், உட்பட இரண்டு உறுப்பினர்களின் பிரேரணை உட்பட 11 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
இதேவேளை வீதியிலிருந்து சபைக்கு கையில் கறுப்புப் பட்டியும், தோலில் கறுப்பு சால்வையும் அணிந்து சபைக்குள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் எம்.எம்.நசுர்தீன் வருகை தந்திருந்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் எம்.எம்.நசுர்தீன் மூன்று பிரேரணைகளை சமர்ப்பித்தார்
அவற்றில் ரம்புக்கனையில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவருக்கான பிரேரணையையும் முன்வைத்தார்.
அத்துடன் அவரது குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.
இதன் போது சபை அமர்வில் கடும் வாதப் பிரதிவாதமும் இடம் பெற்றன.
சபை நடவடிக்கையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆலங்கேணி வட்டார உறுப்பினர் சிவசேகரம் பஞ்சலிங்கம், தனது வட்டாரத்துக்கும் தமிழ் மக்களுக்கும் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் புறக்கணிப்புச் செய்ததாகக் கூறினார்.
இதனால் முன்னாள் தவிசாளருக்கும் சிவசேகரம் பஞ்சலிங்கத்துக்கும் இடையிலான வாக்குவாதம் இடம்பெற்றது.
முன்னாள் தவிசாளர் நான் பாகுபாடு இல்லாமல் எல்லா வட்டார உறுப்பினர்களுக்கும் சகலவிதமான அபிவிருத்திக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். அதற்கான ஆதாரமும் தன்னிடம் உள்ளதாகத் கூறினார்
இதனை அடுத்து ஏனைய உறுப்பினர்களும் இவ் விடயத்தில் கதைக்கத் தொடங்கியதை அடுத்து சபை வாக்குவாத இடமாக மாறியது.
பின்னர் தவிசாளர் (MM. நிவாஸ்) இருவரையும் சமாதானப்படுத்தி ஒரு நிலைக்கு கொண்டு வந்தார்.
இதனை அடுத்து சபை நடவடிக்கை அடுத்த மாதம் கூடுவதாக கூறப்பட்டு நிறைவுற்றது.
